வலங்கைமான்: வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் பாடை காவடி திருவிழா திருவிழாவின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும். இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜம் பேட்டை தெருவில் கும்பகோணம் மன்னார்குடி சாலையில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது இது சக்தி ஸ்தலம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இத் திருவிழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால் காவடி பாடை காவடி அலகு காவடி தொட்டில் காவடி உள்ளிட்டவைகள் எடுத்து நேர்த்தி செய்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பாடை காவடி திருவிழா மார்ச் மாதம் 26ம் தேதியும், ஏப்ரல் 2ம் தேதி புஷ்ப பல்லாக்கு விழாவும், ஏப்ரல் மாதம் 9ம் தேதி கடை ஞாயிறு விழாவும் நடைபெற உள்ளது . தற்போது தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்