×

தூத்துக்குடியில் வீட்டை சூறையாடி பெண்ணை மிரட்டிய 5 பேர் கைது

தூத்துக்குடி, மார்ச் 15: தூத்துக்குடியில் முன்விரோதத்தில் வீட்டை சூறையாடி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி தொம்மையார் காலனியை சேர்ந்தவர் மாடசாமி மகன் சொர்ணராஜ் (29). அண்ணா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் மகன் பாலமுருகன் (25). கடந்த 2021ம் ஆண்டு சிவபெருமாள் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சொர்ணராஜ் கைது செய்யப்பட்டார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
தற்போது ஜாமீனில் வந்துள்ள சொர்ணராஜ், நேற்று முன்தினம் சிதம்பர நகர் டாஸ்மாக் பாரில் மது அருந்தியுள்ளார்.

அப்போது அங்கு வந்த பால முருகன் அவரிடம் தகராறு செய்யவே, அங்கிருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலமுருகன் உட்பட 5 பேர், சொர்ணராஜ் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி அவரது தாயார் வெள்ளையம்மாளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து வெள்ளையம்மாள் அளித்த புகாரின் பேரில் தென்பாகம்  போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து பாலமுருகன், ஆசீர்வாத நகர் பால்பாண்டி மகன் பிரித்வி ராஜன், டிஎம்பி காலனி கண்ணன் மகன் விஜயகுமார் (23), புதியம்புத்தூர் சரவணபெருமாள் மகன் கரன்குமார் (23), ராஜீவ் நகர் முத்துவேல் மகன் திருமணி ராஜன் என்ற வில்லியம்ஸ் (23) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...