×

நாங்குநேரியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் திறப்பு விழா புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார்: அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

களக்காடு, மார்ச்15: புதிய வகுப்பறைகள் கட்ட ஒரே நேரத்தில் 800 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார் என்று நாங்குநேரியில் நடந்த ஸ்மார்ட் வகுப்பறைகள் திறப்பு விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை யூனியன் பகுதியில் 35 பள்ளிகளிலும், களக்காடு யூனியனில் 21 பள்ளிகளிலும், மானூர் ஒன்றியத்தில் 59 பள்ளிகளிலும், நாங்குநேரி யூனியனில் 60 பள்ளிகளிலும், பாப்பாக்குடி யூனியனில் 24 பள்ளிகளிலும் சேரன்மகாதேவி யூனியனில் 9 பள்ளிகளிலும் மொத்தம் 208 பள்ளிகளில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து நிதியின் மூலம் ரூ 4.16 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாங்குநேரியில் நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை வகித்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வரவேற்றார்.

அதனைதொடர்ந்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி காணொலி காட்சி மூலம் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்து பேசுகையில், ‘தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதி படைத்தவர்களது குழந்தைகளுக்கு மட்டும் தான் இந்த ஸ்மார்ட் வகுப்பறை கிடைத்து வந்தது. ஆனால் இந்த திட்டத்தை கிராமங்களிலும், குக்கிராமங்களிலும் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கும், நடுநிலைப்பள்ளிகளுக்கும் நம்முடைய பிள்ளைகள் ஒரு பைசா கூட செலவில்லாமல் கல்வி பெற முடியும் என்பதை இன்றைக்கு நெல்லைச் சீமை தொடங்கி வைத்திருக்கிறது. சட்டப்பேரவை தலைவரும், மாவட்ட பஞ்சாயத்து தலைவரும் சிறப்பாக பணியாற்றி இந்த திட்டத்தை குக்கிராமங்களுக்கும் கொண்டு சென்றுள்ளனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைப்பதை செய்யக்கூடிய மாவட்டம் நெல்லை மாவட்டம் தான் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.
 
தமிழகத்திற்கே ஒரு முன்னோடி மாவட்டமாக கல்வியில் சிறந்து விளக்குகின்ற மாவட்டமாக நெல்லை மாவட்டம் திகழ்கிறது. ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்படும். கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அவரது வழியில் பள்ளிகளில் காலையில் நல்ல தரமான உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக தமிழ்நாட்டில் செயல்படுத்தியுள்ளார். கிராமபுறங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் நல்ல காற்றோட்டத்துடன் கல்வி பயில, புதிய தொழில் நுட்பத்துடன் விசாலமான வகுப்பறைகளை கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் 800 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் கல்வி துறைக்கு ஒரே நேரத்தில் 800 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர் என்று முத்திரை பதித்துள்ளார்”. இவ்வாறு அவர் ேபசினார்.

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருப்பதி, நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா ஆரோக்கிய எட்வின், திமுக ஒன்றிய செயலாளர்கள் நாங்குநேரி மேற்கு சுடலைக்கண்ணு, நாங்குநேரி கிழக்கு ஆரோக்கிய எட்வின், களக்காடு வடக்கு செல்வகருணாநிதி, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் செல்வலெட்சுமி, கனகராஜ், சாலமோன் டேவிட், பாஸ்கர், மகேஷ்குமார், அருள் தவசு, ஜான்ஸ் ரூபா, லிங்கசாந்தி, சத்தியவாணி முத்து, கிருஷ்ணவேணி, தனிதங்கம், நகர திமுக செயலாளர் வானமாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. முன்னதாக நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு நடத்தினார். அதன் பின் செண்பகராமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையையும் அவர் பார்வையிட்டார்.

Tags : Nanguneri ,Chief Minister ,M.K.Stal ,Minister ,I.Periyasamy ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...