×

பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டு 152 நாட்களுக்கு பிறகு மஞ்சளாறு அணையில் தண்ணீர் நிறுத்தம்

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை பாசனத்திற்கு திறந்து 152 நாட்களுக்கு பின் இன்று நிறுத்தப்பட்டது. தேவதானப்பட்டிக்கு வடக்கே மேற்கு தொடர்ச்சிமலை கொடைக்கானல் அடிவாரத்தில் அமைந்துள்ளது மஞ்சளாறு அணை. இந்த அணைக்கு தலையாறு, மூலையாறு, வறட்டாறு, மஞ்சளாறு ஆகிய நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. அணையின் மொத்த உயரம் 57அடி, அணையின் மொத்த கொள்ளளவு 487.35மி.கன அடி, மொத்த பாசன பரப்பு 5259 ஏக்கர், இதில் பழைய ஆயக்கட்டு பாசனம் 3386 ஏக்கர், புதிய ஆயக்கட்டு பாசனம் (வலது பிராதனக் கால்வாய்) 1873 ஏக்கர், தேனி மாவட்டத்தில் 3148 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில் 2111 ஏக்கர் ஆகும். ஆண்டு தோறும் அக்டோபர் 15 தேதி தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு மாவட்ட பாசனத்திற்கு அணை திறப்பது வழக்கம். நடப்பாண்டில் பருவமழை நல்லமுறையில் பெய்து அணை நிரம்பி, அணை திறப்பதற்கு முன்னரே உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பானச பரப்பு விளைநிலங்களில் போதிய தண்ணீர் கிடைத்தது. வழக்கம் போல் கடந்த அக்டோபர் 15 தேதி அணை பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டது. பழைய ஆயக்கட்டு பாசனம் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு முறைப்பாசனம் மூலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நடப்பாண்டில் முறைப்பாசனத்திற்கு குறித்த அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 5,259 ஏக்கர் நெல் சாகுபடி நிலங்களில் நெல் விளைச்சல் அமோகமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அக்டோபர் 15 தேதி பாசனத்திற்கு திறக்கப்பட்ட அணை இன்று மார்ச் 15 தேதி புதன் காலை பாசனத்திற்கு அணை நிறுத்தப்படுகிறது. தற்போது அணை 38.30 அடி உயரம் உள்ளது.

Tags : Manchalaru Dam ,
× RELATED மஞ்சளாறு அணையிலிருந்து 15ம் தேதி முதல்...