பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காலியாக உள்ள சுமார் 230 பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் போது மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க வலியுறுத்தி பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் தலைமை அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோயில் பணியிடங்களை நிரப்பும்போது 5% மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகர செயலாளர் தங்கவேல், பொருளாளர் அய்யனார், ஒன்றிய தலைவர் மணிகண்டன், செயலாளர் கண்ணுச்சாமி, பொருளாளர் பாலக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.