×

தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,930 டன் உளுந்து, பயறு கொள்முதல் செய்ய இலக்கு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் வேளாண் உற்பத்தியினை பெருக்கி, விவசாயப் பெருமக்களின் வருமானத்தை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடப்பு 2022-23ம் ஆண்டு ராபி பருவத்தில் பயறு வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திடும் நோக்கத்தில், மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நடப்பு 2022-23ம் ஆண்டு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனைக்குழுவின் கட்டுபாட்டில் இயங்கி வரும் தஞ்சாவூர், கும்கோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக உளுந்து 3110 மெடன் மற்றும் தஞ்சாவூர், கும்கோணம்.

பாபநாசம், மற்றும் ஓரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக பச்சைப்பயறு 820 மெடன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பச்சைப்பயிறுக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து, ஈரப்பதம் 12 சவீதத்திற்குள் இருக்குமாறு நன்கு உலர வைத்து, அயல் பொருட்கள் கலப்பின்றி கொண்டு வர விவசாயிகளை கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு நன்கு உலர வைக்கப்பட்ட தரமான உளுந்து கிலோ ஒன்றிற்கு ரூ.66.00 வீதமும், பச்சைப்பயறு கிலோ ஒன்றிற்கு ரூ.77.55 வீதமும், கொள்முதல் செய்யப்படும் உளுந்து மற்றும் பச்சைப்பயறுக்கான கிரயத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம் மற்றும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி பதிவு செய்து தங்களது உளுந்து மற்றும் பச்சைபயறினை விற்பனை செய்து பயனடையலாம். பயறு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல இலாபகரமான விலை கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இத்திட்டத்தினை விவசாயப் பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

Tags : Thanjavur ,
× RELATED வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி...