ஆலங்குடி: ஆலங்குடி அருகே அய்யனார், பெரிய கருப்பர், சின்ன கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆலங்குடி தாலுகா கல்லாலங்குடி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் அய்யனார், பெரியகருப்பர், சின்னகருப்பர் மற்றும் பரிவார தெய்வங்கள் திருப்பணி கடந்த ஒரு வருடங்களாக நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடத்துவதென கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊரார்கள் முடிவு செய்து கடந்த மூன்று தினங்களாக யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் சிவாச்சாரியர்களால் நடத்தப்பட்டது.
யாகசாலையில் இருந்து புனித நீரானது அய்யனார் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு கருட வாகனங்கள் காட்சியளிக்க கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து அய்யனார், பெரிய கருப்பர், சின்ன கருப்பு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தீப ஆராதனை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது, இதில் சுற்றுவட்டார கிராமங்களான சூரன்விடுதி, காட்டுப்பட்டி, கல்லம்பட்டி, கீழாத்தூர், சித்தாதிக்காடு, ஆலங்காடு ஆகிய கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.