ஆலங்குடி, மார்ச் 13: ஆலங்குடி அருகே வாராபூரில் உள்ள பெரிய அய்யனார், பாலையடி கருப்பண்ண சுவாமி கோயிலில் மாசித் தேரோட்ட திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை அடுத்த ஆலங்குடி அருகே வாராப்பூர் பெரிய அய்யனார், பாளையடி கருப்பண்ண சுவாமி கோவில் திருவிழா மாசி மாதம் நடைபெறும். இக்கோயிலின் மாசித் திருவிழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இக்கோயிலின் முக்கியத் திருவிழாவான மாசி வைர தேரோட்டத் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவில் வாராப்பூர் மற்றும் சுற்றுவட்டார 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் மா, பலா, வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி வீற்றிருக்க வாணவேடிக்கையுடன் மங்கள இசை முழங்க கோவிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் வைரத்தேர் பவனி வந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு வாராப்பூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க கண்காணிப்பு கேமரா பொருத்திய நடமாடும் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.