ஈரோடு: ஈரோட்டில் கோடை காலம் சீசனையொட்டி மார்க்கெட்டிற்கு மாங்காய் வரத்து துவங்கியுள்ளது. ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் தற்காலிக தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு மங்காய் சீசனில் தினந்தோறும் சராசரியாக 30 டன் வரை மங்காய்கள் விற்பனை ஆகும். தற்போது கோடை காலம் சீசனையொட்டி மாங்காய் வரத்து துவங்கியுள்ளது. இதனால், மார்க்கெட் மண்டிகளில் மாங்காய் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்கெட் பழமண்டி வியாபாரி குட்டி என்ற செந்தில்குமார் கூறியதாவது: ஈரோடு மார்க்கெட்டிற்கு மங்காய்கள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பாலக்கோடு, காவேரிபட்டினம், மதுரை, திண்டுக்கல், ராஜபாளையம் பகுதியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதில், இமாம் பசந்த், பங்கனாபள்ளி, செந்தூரா, கிளிமூக்கு, ரூமேனியா, குண்டு போன்ற ரகங்கள் தற்போது வரத்தாகி உள்ளது. தமிழ் மாதம் சித்திரை பிறப்புக்கு பிறகு அதிகளவில் மங்காய்கள் வரத்தாகும். தற்போது சீசனையொட்டி சுமார் 6 டன் அளவில் மாங்காய் வரத்தாகி உள்ளது. வரத்தான கிளிமூக்கு மங்காய் ரகம் ஒரு கிலோ ரூ.40க்கும், செந்தூரா ஒரு கிலோ ரூ.70க்கும், பங்கனபள்ளி ரூ.80க்கும், குண்டு, இமாம்பச்ந்த் ரூ.200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த வரக்கூடிய வாரங்களில் சேலம் மல்கோவா, நாட்டி மாங்காய்(ஊறுகாய் மாங்காய்), நீலம், அல்போன்சா, இமாம்பச்ந்த் போன்ற அனைத்து ரகங்களும் போதிய அளவுக்கு வரத்தாகும். மாங்காய் வரத்துக்கு ஏற்ப வரக்கூடிய நாட்களில் விலை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.