×

தினமும் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை மாநகராட்சி ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு அம்ருத் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிப்பதுடன்

வேலூர், மார்ச் 12:  அம்ருத் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிப்பதுடன் தினமும் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற அபிவிருத்தி திட்டம் மற்றும் 15ஆவது நிதிக்குழு மானிய திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் தார் சாலைகள், சிமெண்ட் சாலைகள் மற்றும் கான்கிரீட் பேவர் பிளாக் அமைக்கும் பணிகள், திடக்கழிவுகளை இயற்கை உரங்களாக மறுசுழற்சி செய்தல், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 145 பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.

10 நகர்ப்புற சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மாநகராட்சியில் உள்ள 166 நீர்த்தேக்க தொட்டிகளை தூய்மையாக பராமரிப்பது குறித்தும், மாநகராட்சியின் 57 தொடக்கப் பள்ளிகள், 26 நடுநிலைப் பள்ளிகள், 7 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 3 மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும்.

எரிவாயு தகன மேடை, மயான பூமிகளை முறையாக பராமரித்தல், மாநகராட்சியில் உள்ள 50 சமுதாய கழிப்பிடங்கள், 19 கட்டண கழிப்பிடங்கள், ஒரு பொது கழிப்பிடம் ஆகியவற்றை தூய்மையாக சுகாதாரத்துடன் பராமரித்தல் குறித்தும், நடைபெற்று வரும் குடிநீர் பணிகள் குறித்தும், பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மாநகராட்சி எல்லையில் உள்ள தெருவிளக்குகளை பராமரித்தல் மேலும் தேவையான இடங்களில் புதிய தெருவிளக்குகளை அமைத்தல் உள்ளிட்ட திட்ட பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: கடந்த மாதம் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தை தொடங்கி வைத்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேரடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வுக்குப் பிறகு நடந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் குறித்து என்னுடைய தலைமையில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி பணிகளின் முன்னேற்றம் குறித்த விபரங்களை தெரிவிக்க அறிவுறுத்தியதன் அடிப்படையில் இந்த கூட்டம் நடந்தது.

மாநகராட்சிக்கு உட்பட்ட, பகுதிகளில் சாலைகளை சீரமைத்தல் தேவையான இடங்களில் புதிய சாலைகளை அமைத்தல் போன்ற பணிகளை துரிதப்படுத்தவும், சாலைகளில் திடக்கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் தேங்காமல் அன்றாடம் தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது. வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 4 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடிக்கவும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் பணிகளை முடிக்க எதுவாக பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தினார்.

அம்ருத் திட்டத்தில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும், நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு தேவையான 135 லிட்டர் குடிநீரை வழங்குவதற்கு விரைந்து வழிவகை செய்யவும் அறிவுறுத்தினார். இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு ஒவ்வொரு பணியின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும். எனவே சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தங்களுடைய பணிகளை கூர்ந்து கண்காணித்து நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்பி கதிர்ஆனந்த், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில் குமார், மாநகராட்சி ஆணையாளர் ரத்தினசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Thuraimurugan ,Corporation Laboratory ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...