குளத்தூர், மார்ச் 12: குளத்தூர் அருகே மேல்மாந்தை பெத்தனாட்சியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குளத்தூர் அருகே மேல்மாந்தை கிராமத்திலுள்ள பெத்தனாட்சியம்மன் கோயில் திருவிழா வருடந்தோறும் மாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ஊர் பொதுமக்களால் நடத்தப்படும். அதுபோல் இந்தாண்டு திருவிழா கடந்த 2ம்தேதி பந்தகால் நட்டி பக்தர்கள் காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து கடந்த 10ம்தேதி காலை பெத்தனாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையுடன் பூஜைகள் நடந்தது.
நேற்று முன்தினம் காலை சாமியாடிகள் தீர்த்தகரை சென்று புனித நீர் எடுத்து வந்தனர். தொடர்ந்து புனிதநீர் எடுத்து வந்த சாமியாடிகளை மேளதாளத்துடன் பொதுமக்கள் வரவேற்றனர். பின்னர் புனித நீரால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இரவு 10மணிக்கு கோயில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில் விரதம் இருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதி கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், மேல்மாந்தை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.