ஈரோடு: தமிழக ஆளுநரின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்ட குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாநில துணை தலைவர் துளசிமணி, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியும், பல மாதங்களுக்கு பிறகு மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநரின் ஜனநாயக விரோத போக்கை கண்டிப்பதோடு மட்டுமல்லாது, மாநில உரிமைகள் காக்கவும், அதற்கு தடையாக உள்ள ஆளுநரை கண்டித்தும் வருகின்ற 13ம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.