×

அரசு பஸ் டிரைவரின் பைக் பெட்டியை உடைத்து ரூ. 2 லட்சம் கொள்ளை

பெரும்புதூர்: தாம்பரம் அருகே அரசு பஸ் டிரைவரின் பைக் பெட்டியை உடைத்து ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரம் அருகே படப்பை அடுத்த நாட்டரசன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (48), சென்னை மாநகர பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் காலை படப்பை பஜாரில் உள்ள இந்தியன் வங்கியில் ரூ. 2 லட்சம் பணத்தை எடுத்து, தனது பைக்கில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டியுள்ளார். பின்னர், அதே பகுதியில் உள்ள பேட்டரி கடைக்கு சென்றுவிட்டு, வெளியே வந்து பார்த்தார்.

அப்போது, பைக்கில் இருந்த பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்து ரூ. 2 லட்சம் பணம் கொள்ளை போயிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், இதுகுறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள்...