×

காரைக்குடி நகராட்சி பள்ளியில் ஆண்டு விழா

காரைக்குடி: காரைக்குடி தெற்கு தெரு நகர்மன்ற நடுநிலைப்பள்ளியில் 82ம் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் கவிதா வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் ஜோசப் ஆண்டோரெக்ஸ் தலைமை வகித்தார். நகராட்சி சேர்மன் முத்துத்துரை நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், ‘‘நகராட்சி பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் படி சிவகங்கை மாவட்ட நகராட்சிகளுக்கு உட்பட்ட 14 பள்ளிகளில் 1,570 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். முதல்வரின் உத்தரவின்படி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. முதல்வரின் இத்திட்டத்தால் அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் வருவது அதிகரிக்கும்.

கல்வியால் மட்டுமே நாம் உயர்ந்த இடத்துக்கு செல்ல முடியும். கவன சிதறல்கள் இல்லாமல் கல்வி கற்க வேண்டும். கல்வியோடு சேர்ந்த பிற திறமைகளையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்வியில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு மாற முதல்வர் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்’’ என்றார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் சத்தியா கார்த்திகேயன், கண்ணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வைரவன், முன்னாள் தலைமையாசிரியர் காத்தமுத்து, மேற்பார்வையாளர் செல்வகுமார், திமுக முன்னாள் நகர இளைஞரணி காரை சுரேஷ், தெற்குதெரு கார்த்திகேயன், பொறியாளர் பெருமாள், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரவீன், வட்ட செயலாளர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் ராஜேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். உதவி ஆசிரியர் ஜோதி நன்றி கூறினார்.


Tags : Karaikudi Municipal School ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது