நாமக்கல்லில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பு

நாமக்கல், மார்ச் 9: நாமக்கல் மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இதையொட்டி, சென்னையில் நடந்த மகளிர் தின விழாவில், நாமக்கல் கலெக்டருக்கு விருது வழங்கி முதல்வர் பாராட்டினார். நாமக்கல் மாவட்டத்தில், பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதத்தை அதிகரித்தல், மாவட்ட அளவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பை குறைத்தல் போன்ற பணிகளில், கலெக்டர் ஸ்ரேயா சிங் முனைப்புடன் பணியாற்றினார். இதற்காக மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து, மருத்துவர்களுடன் பெண் குழந்தை பிறப்பு விகித்ததை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை முன்னெடுத்தார். இதற்காக சுகாதாரத் துறையினர் சார்பில் கிராமங்களில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மாவட்டத்தின் கருக்கலைப்பு விகிதமும் கலெக்டர் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலம் குறைந்துள்ளது. கலெக்டர் உத்தரவுப்படி, 1994ம் ஆண்டுக்கு முன் கருத்தரிப்பு மற்றும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை நுட்பங்கள் சட்டம், மாவட்டத்தில் வலுவாக செயல்படுத்தப்பட்டது. பரிசோதனை மையங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர். பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடத்தப்பட்டது. பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களில், அதிக அளவு பயனாளிகளை பயன்பெற செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட அளவில் பெண் சிசு கொலையை தடுத்து, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுத்தப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழாமல் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்பட்டது.

இத்தகைய பணிகளை மேற்கொண்டதால், நாமக்கல் மாவட்டத்தில் 2022-2023ம் ஆண்டில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் உயர்ந்துள்ளது. இதற்காக, நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் 3 இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், நேற்று சர்வதேச மகளிர் தினவிழா நடைபெற்றது. இதில், பெண் இனம் தழைத்திடும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயல்பட்ட, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்குக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், வெண்கலப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். நாமக்கல் கலெக்டர், தமிழக அளவில் சிறந்த கலெக்டருக்கான 3ம் பரிசை பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு அதிகரித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 873 ஆக இருந்தது. சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட தொடர் விழிப்புணர்வு பிரசாரம் மூலம், ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த 2020-21ம் ஆண்டு, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 943 ஆக இருந்தது. 2021-22ம் ஆண்டில் 941 ஆக குறைந்தது. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மூலம், 2022-23ம் ஆண்டில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 953 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: