கூடலூர்: கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு நடைபெற்ற பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நிறைவு நிகழ்ச்சியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து நாட்டுநலப்பணி திட்ட தன்னார்வாலர்களுக்கான, நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு குறித்த மூன்று நாள் கருத்தரங்கு நிறைவு நாள் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சுகாதாரத்துறை, மின்வாரியம், புவியியல் துறை மற்றும் வனத்துறை சார்பில் கலந்து கொண்ட அலுவலர்கள் பேரிடர் மேலாண்மை குறித்து பல்வேறு விளக்கங்கள் அளித்தனர். ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன பயிற்சி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் வசந்தி நடராஜன் இணையதளம் மூலமாக மாணவர்களிடையே கலந்துரையாடினார். தேசிய கயிறு வாரியத்தலைவர் குப்புராமு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரிடர் மேலாண்மை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் பணி குறித்து பேசினார்.
இதில் பங்குபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையேற்றார். கல்லூரி நிதியாளர் மற்றும் நுண்ணுயிரியல் துறைத்தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் அர்ச்சுணன் வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.