கும்பகோணம்: கும்பகோணத்தில் மாசி மக ஆரத்தி பெருவிழா நேற்று முன்தினம் இரவு சிறப்பாக நடைபெற்றது. கும்பகோணத்தில் மாசிமக பெருவிழாவை முன்னிட்டு உலக மக்கள் நன்மைக்காக, அச்சுறுத்தும் கொடிய நோய்களில் இருந்து அனைவரும் விரைவில் முழுமையாக விடுபடவும், கும்பகோணம் மகாமக குளத்தில் துறவியர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒருசேர பங்கேற்ற மாசிமக ஆரத்தி பெருவிழா நேற்று முன்தினம் இரவு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஒரே சமயத்தில் அலங்கார மற்றும் நாக தீபங்களை ஏற்றி நந்தி வாத்தியங்கள் நாதஸ்வர மேள தாளம் முழங்க வழிபட்டனர். இந்த ஆரத்தி பெருவிழாவினையொட்டி, தேவார திருமுறைகள், நாலாயிர திவ்யபிரபந்தம், நாமசங்கீர்த்தனம், சதுர்வேத பாரயாணம் ஆகியவையும் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு மாநகர் வீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களின் நடமாட்டத்துடன் திருவிழா கோலமாக இருந்தது. இந்த மகா ஆர்த்தி விழாவில் சூரியனார் கோவில் ஆதீனம் 28வது குருமகாசந்நிதானம் மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி திருமடம் இளவரசு மத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளைவேலப்ப தம்பிரான் சுவாமிகள், துலாவூர் ஆதீனம் குரு மகாசந்நிதானம் நிரம்பிய அழகிய தேசிக சுவாமிகள், அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறுவனர் மத் சுவாமி ராமானந்த மகராஜ், பொதுச்செயலாளர் ஆத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், பொருளாளர் மத் சுவாமி வேதாந்த ஆனந்தா, ஒருங்கிணைப்பாளர் கோரக்ஷானந்த சரஸ்வதி சுவாமிகள், இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், துணை மேயர் தமிழழகன், சிட்டி யூனியன் வங்கி பவுண்டேஷன் தலைவர் பாலசுப்பிரமணியன், அரசு கல்வி குழுமம் தலைவர் திருநாவுக்கரசு, சிவராமன், தென்பாரத கும்பமேளா கும்பகோணம் மகாமக அறக்கட்டளை தலைவர் சௌமி நாராயணன், செயலாளர் சத்யநாராயணன், பொருளாளர் வேதம் முரளி, சிவபிரகாஷ், வாசன் வெங்கட்ராமன், தீபிகா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.