×

காரைக்காலில் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

காரைக்கால்: காரைக்காலில் தங்கி பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் முகமது மன்சூரிடம் திமுக எம்எல்ஏ.க்கள் நாஜிம், நாக. தியாகராஜன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அண்டை மாநிலமான தமிழகத்தில் பணிபுரிந்து வரும் மாநில வட தொழிலாளர்களுக்கு ஆபத்து. கொல்லப்படுகிறார்கள் என்று ஒரு விஷம பிரசாரத்தை சில பிரித்தாலும் கொள்கை கொண்ட கட்சிகள் செய்து கொண்டிருப்பதை காண முடிகிறது. இதை உணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழு வீச்சில் செயல்பட்டு அனைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு அரணாக இருந்து வடமாநில தொழிலாளர்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்கும் என்ற உத்தரவாதத்தை தந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் வழங்கி வருவது நாடறிந்த உண்மை.

எனவே மாவட்ட கலெக்டர் காரைக்கால் பகுதியில் துறைமுகம், பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் நடைபெற்று கொண்டிருக்க கூடிய அனைத்து பணிகளிலும் உழைத்து கொண்டிருக்க கூடிய வட மாநில சகோதரர்களை காப்பாற்றுகின்ற வகையில் அவர்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து செயலாற்றும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அந்தந்த இடங்களுக்கு சென்று வடநாட்டு தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். மேலும் வடமாநில தொழிலாளர்களுக்கு என்று தனி தொலைபேசி எண்ணை உருவாக்கி வடமாநில தொழிலாளர்கள் தனக்கு ஏதேனும் ஆபத்து என்றால் மாவட்ட நிர்வாகத்தை அல்லது காவல்துறை உடனடியாக தொடர்பு கொள்ளும் அந்த தொடர்பு வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். இந்த பணிகளை தொழிலாளர் நலத்துறை உன்னிப்பாக கண்காணித்து வர வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

Tags : Karaikal ,North ,State ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...