நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாசிமகத்தை முன்னிட்டு தீமிதி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி கண்ணித்தோப்பு கிராமத்தில் சவுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறும். இதன்படி இந்த ஆண்டு மாசிமக திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதை தொடர்ந்து சக்தி கரகம் புறப்பட்டு ஆலயம் வந்தடைந்தது. பின்னர் ஆலயம் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் சக்திகரகம் இறங்கியது. தொடர்ந்து மஞ்சள் நிற உடையணிந்த பக்தர்கள் தங்கள் அம்மனை வேண்டிக்கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன் பின்னர் பெண்கள் மாவிளக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர்.