திருப்பரங்குன்றம்: மதுரை, திருநகரில் நடைபெற்ற மாநில ஹாக்கி போட்டியில் சென்னை மாநகர போலீஸ் அணி வெற்றி பெற்றது. மதுரை, திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் 24வது மாநில அளவிலான பாலசுப்பிரமணியம் ஜெய்சிங் பழனியாண்டவர் மெய்யப்பன் நினைவு சுழற்கோப்பைக்கான ஹாக்கி போட்டி திருநகர் அண்ணா பூங்காவில் கடந்த பிப்.27ல் துவங்கியது. மாநில அளவிலான இந்த போட்டியில் கோவில்பட்டி, திருநெல்வேலி, சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த தமிழக காவல், வருமானவரி மற்றும் வனத்துறை உள்ளிட்ட 28 அணிகள் பங்கேற்றன.
இதற்கான அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி எக்ஸலன்ட் அணியினரும், சென்னை மாநகர காவல்துறை அணியினரும் நேற்று முன்தினம் இறுதிப்போட்டியில் விளையாடினர். இதில் கோவில்பட்டி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வென்றது. இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணியினருக்கு சுழற்கோப்பையை மற்றும் சான்றிதழ்களை மாமன்ற உறுப்பினர் உசிலை சிவா வழங்கினார்.