×

ராஜஸ்தானில் கொள்ளையர்களின் நகைகளை மீட்க சென்ற போது ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் திருச்சி தனிப்படை போலீசார் சிக்கினர்: மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா விளக்கம்

திருச்சி: ராஜஸ்தானில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் திருச்சி தனிப்படை போலீசார் சிக்கினர். இந்த சம்பவத்தில் நடந்தவற்றை திருச்சி மாநகர் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்தியபிரியா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி; ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்தன்(38), ராம் பிரசாத்(22), சங்கர்(25), ராமா(40) ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் திருச்சியில் தங்கியிருந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடி வந்துள்ளனர். இவர்கள் திருச்சி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 10 வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த 10 வழக்குகளில் திருடப்பட்ட சொத்தின் மதிப்பு சுமார் 254 பவுன் நகைகளும் மற்றும் 1 கிலோ வெள்ளியும் ஆகும். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 23 ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் திருடிய நகை மற்றும் வெள்ளி பொருள்களை ராஜஸ்தான் சென்று அங்கு திருட்டு நகை வாங்குபவர்களிடம் விற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருடப்பட்ட நகைகளை மீட்க கடந்த பிப் 27 ம் தேதி அமர்வு நீதிமன்ற குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி நீதிமன்றம் மூலம் அந்த 4 பேரையம் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டி பிராமண பத்திரம் தாக்கல் செய்து, ஆணை பெற்றார். இதைத்தொடர்ந்து ரத்தன், சங்கர் ஆகியோருடன் கண்டோன்மென்ட் உதவி ஆணையர் கென்னடி தலைமையில் 2 ஆய்வாளர்கள், 1 உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய 15 பேர் கொண்ட தனிப்படையினர் வாகனத்தில் சாலை மார்க்கமாக கடந்த 28ம் தேதி திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

ராஜஸ்தான் சென்ற தனிப்படையினர் பில்வாரா மாவட்டம் சாப்புரா என்ற இடத்தில் உள்ள புலியாகலான் காவல் நிலையத்திற்கு மார்ச் 2 ம் தேதி சென்று உள்ளுர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் 3 காவலர்கள் உதவியுடன் புலியா பஜார் என்ற இடத்தில் திருட்டு நகைகளை பெற்று வைத்திருந்த கன்சியாம் என்ற நபரிடமிருந்து 300 கிராம் தங்கத்தையும் 2 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் மற்றொரு திருட்டு நகைகளை வாங்கிய அஜ்மிர் மாவட்டம் ராமலயா கிராமத்தை சேர்ந்த சானியா என்பவரை பினாய் காவல் நிலைய உள்ளூர் காவலர்கள் உதவியுடன் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் 100 பவுன் தங்க நகைகளை திருப்பி கொடுப்பதாக ஒத்துக்கொண்டுள்ளார்.

பின்னர் உள்ளூர் காவல் அதிகாரிகளின் துணையுடன் ரத்தனின் வீட்டை சோதனையிட்ட தனிப்படையினர் அங்கு இருந்த 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் சானியாவிடமிருந்து நகைகளை திரும்ப பெறுவதில் காலதாமதம் ஆனதால் 5ம் தேதி திருச்சிக்கு திரும்பி செல்ல முடிவெடுத்த தனிப்படையினர் மீட்கப்பட்ட வழக்கு சொத்துக்களுடன் ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது சுமார் 11.30 மணிக்கு சானியாவின் சகோதரர் லட்சுமணன் என்பவர் தனிப்படையினரை அலைப்பேசியில் தொடர்பு கொண்டு திருடப்பட்ட தங்க நகைகளுக்கு ஈடாக 25 லட்சம் ரூபாய் கொடுத்து விடுவதாகவும் அஜ்மீர் வந்து தொகையை பெற்று செல்லும்படி தெரிவித்துள்ளார்.

அன்று மதியம் உதவி ஆணையர் கென்னடி, இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி மற்றும் ஒரு காவலரை இரண்டு எதிரிகளுடன் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தலைமையில் மீதமிருந்த தனிப்படையினர் அஜ்மீருக்கு புறப்பட்டு சென்று லெட்சுமணன் கூறிய இடமான ரெயில்வே நிலையம் அருகில் சென்றனர். அப்போது அங்கிருந்த ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திருச்சி தனிப்படையினரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். லெட்சுமணன் என்பவர் திருட்டு வழக்கிலிருந்து தனது சகோதரரை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.25 லட்சம் தரவேண்டும் என திருச்சி தனிப்படை போலீசார் தங்களை மிரட்டுவதாக அதிகாரிகளிடம் பொய்யான தகவலை தெரிவித்தார். அதன் பேரில் அதிகாரிகள் தவறான புரிதல் காரணமாக விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.

அதன்பின்னர் ராஜஸ்தான் காவல்துறையினருக்கும் ஊழல் தடுப்புபிரிவு அதிகாரிகளுக்கும் தனிப்படையினர் உயர் அதிகாரிகளின் ஒப்புதலோடு தான் திருட்டு வழக்கு சொத்துக்களை மீட்பதற்கு முறையான ஆவணங்களுடன் வந்துள்ளனர் என்ற விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனிப்படையினர் நேற்று மதியம் 3.30 மணியளவில் ராஜஸ்தானில் இருந்து புறப்பட்டனர் என்றார். மேலும் அவர் கூறுகையில் தற்போது வௌிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சனை பவரலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் திருச்சியில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் மிக அமைதியாக உள்ளது.

மேலும் திருச்சி மாநகரில் உள்ள வாடகைக்கு வீடுகளை தரும் வீட்டின் உரிமையாளர்களிடம் வாடகைக்கு வருபவர்களின் முழுவிவரம் குறித்து அறிந்த பின்னரே அவர்களுக்கு வாடகைக்கு விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்களோடு இதுவரை 80 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் குடியிருப்புகளில் நல்ல தரமான கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த கூறியுள்ளோம். அதேபோல் வௌிமாநிலங்களில் இருந்து திருச்சிக்கு வரும் நபர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து வருகிறது. மேலும் திருச்சி மாவட்டத்தில் 5 ஆயிரம் வௌிமாநிலங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களுக்கு வாட்ஸ்ஆப் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவர்களுடைய எண்கள், முகவரி அனைத்தும் பெறப்பட்டு வருகிறது என்றார்.

Tags : Trichy ,Rajasthan ,Municipal Police Commissioner ,Sathyapriya ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்