×

குத்தாலம் அருகே திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் மாசிமக தீர்த்தவாரி

குத்தாலம்: குத்தாலம் அருகே திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே திருமணஞ்சேரி கிராமத்தில் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி, அம்பாளை தரிசித்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் திருமணம் கைகூட வேண்டி நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் கோயிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு செல்வதும், திருமணம் கைகூடியதும் தம்பதி சமேதராய் கோயிலுக்கு வந்து பூஜைகள் செய்து செல்வதும் வழக்கம்.

சிறப்புமிக்க இக்கோயிலின் மாசி மக பெருவிழா கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வுகளான தெருவடைச்சான், தேர் திருவிழா நடந்து முடிந்தது. தொடர்ந்து நேற்று காலை நடராஜர் ருத்ரபார தீர்த்தமும், மதியம் கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு கோயிலை வலம் வந்து விக்ரமன் ஆற்றுக்கரையில் எழுந்தருளினர். அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத, மங்கள வாத்தியம் இசைக்க அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு அஸ்திரதேவர் காவிரியில் நீராட அங்கு திரண்டு இருந்த திரளான பக்தர்களும் காவிரியில் புனித நீராட மாசிமக தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது.

தொடர்ந்து அம்பாளுக்கும், பஞ்சமூர்த்திகளுக்கும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தீர்த்தவாரியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நிர்மலா தேவி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Masimaga Theerthavari ,Uthvaganatha Swamy Temple ,Bridwanajeri ,Kutthalam ,
× RELATED மக்களோடு மகேசன் கொண்டாடும் மாமல்லபுரம் மாசிமகம்