×

பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் குத்தாலம் அருகே திருமணஞ்சேரியில் உத்வாகநாதர் சுவாமி கோயிலில் மாசிமக தேரோட்டம்

குத்தாலம்: குத்தாலம் அருகே திருமணஞ்சேரியில் உத்வாகநாதர் சுவாமி கோயிலில் மாசிமக தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அருகே திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் சிவன், கல்யாண சுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து கொண்டதாக புராணம் கூறுகின்றது. திருமணத்தடை உள்ளவர்கள், நீண்ட நாட்களாக வரன் அமையாதவர்கள், இங்கு தினமும் நடைபெறும் திருமண பிரார்த்தனையில் பங்கேற்று அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.



பல்வேறு சிறப்புகளையுடைய இந்த கோயிலில் மாசிமக பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினந்தோறும் சுவாமி புறப்பாடு, வீதியுலா நடைபெற்றது. 9ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.  இதனை முன்னிட்டு கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் ராஜ அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருள செய்யப்பட்டு கோயில் வளாகத்தை சுற்றிவந்து சிறப்பு ஹோமம் மற்றும் மகா பூரணாஹூதி செய்து தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், சிவ கைலாய வாத்தியங்கள், வானவேடிக்கை முழங்க சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். மகா தீபாராதனை செய்யப்பட்டு கோயில் செயல்அலுவலர் நிர்மலாதேவி மற்றும் பொதுமக்கள் தேங்காய் உடைக்க வானவேடிக்கை முழங்க திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்து தேரோட்டம் முடிவடைந்தது. வீடுகள்தோறும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி தனது மனைவியுடன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். இன்று (6ம்தேதி) முக்கிய விழாவாக தீர்த்தவாரி நடைபெறுகிறது.


Tags : Udhwaganatha Swamy ,Vivanancheri ,Guthalam ,
× RELATED கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி...