×

கடையம், ஆழ்வார்குறிச்சியில் துணிகரம் 7 கோயில்களில் அடுத்தடுத்து உண்டியல் உடைத்து கொள்ளை

கடையம்: கடையம் அருகே புங்கம்பட்டி சக்தி கோயில், பொட்டல்புதூர் முப்புடாதி அம்மன், தங்கம்மன் கோவில், பாப்பான்குளம் இசக்கியம்மன் கோயில், மடவார் வளாகம் கருத்தீஸ்வரர் கோயில், கடையம் சக்தி கோயில், வெள்ளிகுளம் உச்சிமாகாளி அம்மன் கோயில்  ஆகிய 7 கோயில்களில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர். காலையில் கோயில்களுக்கு சென்று பார்த்த பக்தர்கள் உண்டியல்களை உடைத்து, அதில் இருந்த காசுகள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கருத்தீஸ்வரர் கோயில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பூசாரியின் பணம் ரூ.6 ஆயிரம் திருடிச் சென்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பொதுமக்கள், பூசாரிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடையம், ஆழ்வார்குறிச்சி சப்.இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில், எஸ்பி தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ஒவ்வொரு கோயில்களுக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தினார். 7 கோயில்களிலும் ஒரே மாதிரியாக உண்டியல்கள் மற்றும் பீரோக்களின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரே கும்பல் தான் அடுத்தடுத்து இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து கோயில்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் பைக்கில் கோயில்களுக்கு சென்று வருவது தெரிய வந்தது.  போலீசார் சிசிடிவியில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் ஒரே நாளில் 7 கோயில்களில் அடுத்தடுத்து உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Venture ,Shadam ,Dadavargokuri ,
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!