×

புதுச்சேரியில் பரபரப்பு: தனியார் நிறுவன மேலாளரின் கார் கண்ணாடியை உடைத்து பணம் திருட்டு

புதுச்சேரி, மார்ச் 5:  புதுச்சேரி ராஜாசிங் வீதியை சேர்ந்தவர் சிராஜிதீன் மகன் முகைதீன் பைசல் (30). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ளனர். முகைதீன் பைசல் சூரமங்கலத்தில் உள்ள தனியார் சோப் ஒர்க் நிறுவனத்தில் கடந்த 6 வருடங்களாக மேலாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு தனது காரில் அங்கு வசூலித்த பணம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் செல்போன், மணிபர்ஸ் ஆகியவற்றை அவரது லேப்டாப் பேக்கில் வைத்துள்ளார்.

பின்னர் லேப்டாப் பேக்கை காரின் பின்புறமுள்ள இருக்கையில் வைத்த முகைதீன் பைசல், தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது காரை காந்தி வீதியிலுள்ள ஒரு கோயில் ஓரமாக நிறுத்திவிட்டு ராஜாசிங் வீதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. மீண்டும் சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து வந்து தனது லேப்டாப் பேக்கை எடுக்க வந்தபோது, காரின் இடது பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். கார் கதவை திறந்து பார்த்தபோது லேப்டாப் பேக்கில் வைத்திருந்த ரூ.1.10 லட்சம், செல்போன், மணிபர்ஸ் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக முகைதீன் பைசல், ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் முறையிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்ஐ ஜாகீர் உசேன் தலைமையிலான போலீசார், கார் கண்ணாடி உடைத்து பணம், பொருளை திருடியது தொடர்பாக வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து, சந்தேகத்துக்கிடமான வகையில் நகர பகுதியில் நள்ளிரவில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு