×

தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்ட விழாவுக்கு தயாராகும் ஆழித்தேர்

திருவாரூர்: திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழாவினையொட்டி ஆழித்தேர் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயில் சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. கோயில் மூலவராக வன்மீகநாதரும், உற்ச்சவராக தியாகராஜர் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

கோயிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும், அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் இந்த ஆழித்தேரோட்ட விழா வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி நடைபெறுவதையொட்டி இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் கடந்த மாதம் 5ந் தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மஹாத்துவஜா ரோகணம் எனும் கொடியேற்றம் நிகழ்ச்சியானது வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 7.30 மணியளவில் தியாகராஜர் சன்னதி எதிரே இருந்து வரும் கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் மூலம் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித் தேரானது மற்ற ஊர் தேர்களை போல் எண்பட்டை அறுகோணம், வட்டவடிவமைப்பு போன்று இல்லாமல் பட்டை வடிவ அமைப்பினை கொண்டதாகும். மொத்தம் 20 பட்டைகளை கொண்ட இந்த தேரானது நான்கு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்பகுதி 20 அடி உயரமும், 2வது பகுதி 4அடி உயரமும், 3வது பகுதி 3அடி உயரமும் கொண்டதாகவும். இறுதியாக 4வது பகுதியாக தேரின் மேடை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தேரோட்டத்தின் போது தியாகரஜசுவாமி அமர்ந்து வலம் வருவது வழக்கம். மேலும் சாதாரணமாக 30 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட இந்த தேரானது 4 ராட்சத இரும்பு சக்கரங்கள் உள்பட மொத்தம் 220 டன் எடை கொண்டதாகும்.

தேரோட்டத்தின் போது மூங்கில்கள், பனஞ்சப்பைகள் கொண்டு விமானம் வரையில் 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி, அதன் மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம், அதற்கும் மேல் 6அடி உயரத்தில் தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு சுமார் 300 டன் எடையுடன் முன் பகுதியில் 33 அடி நீளமும், 11 அடி உயரமும் கொண்ட கம்பீரமான 4 மர குதிரைகள் கட்டப்பட்டு நகரின் 4 வீதிகளையும் ஆடி அசைந்தாடியபடி ஆரூரா தியாகேசா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளக்க ஆழித்தேர் நகர்ந்து செல்லும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும்.

ஆழித்தேர் கட்டுமான பணிக்கு குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு மேல் தேவை என்ற நிலையில் இதற்காக ஆழித்தேரின் கண்ணாடி கூண்டுகள் ஏற்கனவே பிரிக்கப்பட்டு தேர் கட்டுமான பணிகள் துவங்கியுள்ள நிலையில் தற்போது தேரின் மேற் பகுதியில் பனஞ்சப்பைகளை கொண்டு கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் உள்துறைகட்டளை பரம்பரை அறங்காவலர் ராம் தியாகராஜன், உதவி ஆணையர் ராணி, செயல் அலுவலர் அழகியமணாளன் ஆகியோர் மேற்பார்வையில் பணியாளார்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Thiagaraja Swami Temple ,
× RELATED தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்: 21ம் தேதி உள்ளூர் விடுமுறை