×

ரேஷன் அரிசி கடத்தலை தடுத்த போலீசாருக்கு ஏடிஜிபி பாராட்டு

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரியில் ஏடிஜிபி அருண் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டு, ரேஷன் அரிசி கடத்தலை தடுத்த போலீசாரை பாராட்டினார்.தமிழக உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஏடிஜிபி அருண் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவர் கிருஷ்ணகிரியில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிருஷ்ணகிரி வழியாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பணியாற்றிய போலீசாரை பாராட்டினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரா, கர்நாடகா ஆகிய 2 மாநிலங்களின் எல்லைப்பகுதியில் உள்ளது.

இந்த வழியாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இதன் விளைவாக தற்போது 95 சதவீதம் ரேஷன் அரிசி கடத்தல் முழுமையாக கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. பொதுமக்களுக்கு போய் சேர வேண்டிய ரேஷன் அரிசியை, வெளி மாநிலங்களுக்கு கடத்த அனுமதிக்க கூடாது. ரேஷன் அரிசி கடத்துபவர்களை தொடர்ந்து கண்காணித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் அரிசி கடத்தல் பற்றி பொதுமக்கள் கட்டணமில்லா 1800 599 5950 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள், முடிக்கப்பட்ட வழக்குகள் ஆகியவை பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். மேலும் முடிக்கப்படாமல் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அவர் அறிவுரை வழங்கினார். மேலும் போலீசாரின் குறைகளை கேட்ட அவர். அதை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த ஆய்வின் போது எஸ்பி. பாலாஜி, டிஎஸ்பி விஜயகுமார், கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி, எஸ்.ஐ.க்கள் நேரு, மூர்த்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Tags : ADGP ,
× RELATED போதைப்பொருள் விற்றவர்களின் ரூ.18 கோடி சொத்துகள் முடக்கம்: காவல்துறை பேட்டி