×

700 குழந்தைகளின் தாயார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல் கலெக்டர் துவக்கி வைத்தார்

விருதுநகர், மார்ச் 4: விருதுநகர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 700 குழந்தைகளின் தாயார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் திட்டத்தை கலெக்டர் ஜெயசீலன் நேற்று துவக்கி வைத்தார். விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி, சங்கரலிங்கபுரம் கிராமங்களில் உள்ள இரு தாய்மார்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் முலம் ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கி பேசுகையில், மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுடைய 700 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், திருச்சுழி, வெம்பக்கோட்டை, விருதுநகர், வத்திராயிருப்பு ஆகிய 12 வட்டாரங்களில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 308 குழந்தைகளின் தாய்மார்களுக்கு இரு ஊட்டச்சத்து பெட்டங்கள் வழங்கப்படுகிறது. மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உடைய 392 குழந்தைகளின் தாய்மார்களுக்கு தலா ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் என 1008 பெட்டங்கள் வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு