×

(தி.மலை) ₹12 கோடியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு தாலுகா அலுவலகத்தை தூய்மையாக வைக்க உத்தரவு ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில்

ஆரணி, மார்ச் 3: ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வெள்ளேரி, வேலப்பாடி, கமக்கூர், தச்சூர், மருசூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைப்பெற்று வரும் பள்ளி கட்டிடம், சமையல் அறை கட்டிடம், சிமென்ட் சாலை அமைத்தல், நியாயவிலை கடைகள், ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம், இலங்கை தமிழர்களுக்கு 111 அரசு தொகுப்பு வீடு உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பா.முருகேஷ் நேற்று அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோல், ஆரணி அடுத்த காமக்கூர் ஊராட்சியில் கமண்டல நதி ஆற்றின் குறுக்கே ₹12 கோடியில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டாறிந்தார், அதைத்தொடர்ந்து, ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை தரமானமுறையில் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், மருசூர் கிராமத்தில் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருட்களை கலெக்டர் வழங்கினார்.

முன்னதாக, ஆரணி டவுன் பகுதிக்கு வந்த கலெக்டர் திடீரென தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்கள் கூறுகையில், தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், இருக்கைகள், கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். மேலும், தாலுகா அலுவலகம் முழுவதும் குப்பை சூழ்ந்து சுகாதார மற்ற நிலையில் இருந்து வருகிறது. அதனால், தாலுகா அலுவலகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து, கலெக்டர் ஆணையாளரை தொடர்பு கொண்டு தாலுகா அலுவலகத்தில் தூய்மை பணிகள் மேற்கொண்டு, சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு உத்தவிட்டார்.

மேலும், அடிப்படை வசதிகளான குடிநீர், இருக்கை, கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்ததவும் தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அப்போது, ஆர்டிஓ தனலட்சுமி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கோவிந்தராசு, உதவி பொறியாளர் ராஜகணபதி, தாசில்தார் ஜெகதீசன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) சுரேஷ்குமார், உதவி செயற்பொறியளர் கோவேந்தன், பிடிஓக்கள் பிரபாகரன், திலகவதி, சவிதா, உதவி பொறியாளர் மதுசூதனன், சரவணன், சிவக்குமார், சரவணன், பணிமேற்பார்வையாளர் அண்ணாதுரை உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : T.Malai ,Arani ,West Arani ,
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...