களக்காடு, மார்ச் 3: தென்காசி ஹரிஹர விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஷேக் மீரான் மைதீன் (36). இவரது மனைவி ஜன்னத் நஸ்ரின் பானு (22). தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே ஷேக் மீரான் மைதீன் தனது குடும்பத்தினர் தூண்டுதலின் பேரில் ஜன்னத் நஸ்ரின் பானுவை அடிக்கடி தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்த ஜன்னத் நஸ்ரின் பானு, களக்காடு வியாசராஜபுரம் முஸ்லிம் தெற்குத் தெருவில் உள்ள தனது தந்தை அகமது மீரான் வீட்டில் கடந்த 15 மாதங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ஷேக் மீரான் மைதீன், களக்காடு வந்து ஜன்னத் நஸ்ரின் பானு தந்தை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, ஜன்னத் நஸ்ரின் பானுவிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது அவர் ஜன்னத் நஸ்ரின் பானுவை அவதூறாக பேசி தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்தாராம். பின்னர் இதுகுறித்து ஜன்னத் நஸ்ரின் பானு அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த களக்காடு எஸ்ஐ ரங்கசாமி, ஷேக் மீரான் மைதீனை கைது செய்தார்.