×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3,363 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் 3,363 ஊட்டச்சத்து பெட்டக தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட பணிகள் சார்பில் “ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்து, குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி பேசியதாவது: “ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்டம், பர்கூர் ஒன்றியம், சின்னமட்டாரப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் துவங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், காவேரிப்பட்டணம், வேப்பனஹள்ளி, சூளகிரி, கெலமங்கலம், ஓசூர், தளி ஆகிய 10 ஒன்றியங்களில் உள்ள 1,796 அங்கன்வாடி மையங்களில், மிக கடுமையான ஊட்டச்சத்து குறையுள்ள 939 குழந்தைகளின் தாய்மார்களுக்கு, தலா 2 ஊட்டசத்து பெட்டகம் என 1,878 ஊட்டச்சத்து பெட்டகமும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,485 குழந்தைகளின் தாய்மார்களுக்கு தலா ஒரு ஊட்டசத்து பெட்டகம் என மொத்தம் 3,363 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படவுள்ளது.

மேலும், 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, 8 வாரங்களுக்கு, அதாவது 56 நாட்களுக்கு ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துவதற்காக, பசை வடிவிலான ஊட்டச்சத்து மருந்து வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து பெட்டகத்தில் புரோட்டின் பவுடர் 1 கிலோ, பேரிச்சை பழம் 1 கிலோ, இரும்பு சத்து டானிக் 3, டவல் 1, நெய் அரை கிலோ மற்றும் குடற்புழு நீக்க மாத்திரை 1 ஆகியவை வழங்கப்பட உள்ளது.
அங்கன்வாடி பணியாளர்களை கொண்டு, பெட்டகத்தில் உள்ள ஊட்டச்சத்து பொருட்களை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என, பயனாளிகளுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். தொடர்ந்து, ஊட்டச்சத்து உணவு கண்காட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பாக, குழந்தைகளுக்கு வாராந்திர சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாமை பார்வையிட்ட கலெக்டர், அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உருண்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் ஜெயந்தி, புள்ளியியல் ஆய்வாளர் சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமார், மாவட்ட பயிற்சி குழு மருத்துவர்கள் விமல், மணிகண்டன், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மாலினி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றி, சரவணி, தாசில்தார் பன்னீர்செல்வி, பிடிஓ.,க்கள் சுப்பிரமணி, வெங்கடராமகணேஷ், சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Krishnagiri district ,
× RELATED பச்சை மிளகாய் சாகுபடி அதிகரிப்பு