பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த வினாடி, வினா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த வினாடி, வினா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக மாதம் தோறும் ஒளிபரப்பப்படும், சிறார் திரைப்படம், பள்ளி நூலகங்களில் மாணவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் சார்ந்த திறனாய்வு செய்தல், பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு வெளியிடும் சிறார் மாத இதழான தேன் சிட்டு இதழில் வரும் அறிவுசார் தகவல்கள் சார்ந்த வினாடி-வினா போட்டி ஆகியவற்றிற்கான போட்டிகளை மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. வட்டார அளவிலான வினாடி-வினா போட்டி கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கான ஏற்பாட்டினை வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்த போட்டியினை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மணிகண்டன், வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முத்துக்குமார் ஒருங்கிணைத்தார். நடுவர்களாக பட்டதாரி ஆசிரியர்கள் ராஜமாணிக்கம், முத்து மீனா, ஆகியோர் செயல்பட்டனர். இப்போட்டியில் தேன் சிட்டு மாத இதழில் இடம் பெற்ற வினாக்கள், நடப்பு நிகழ்வுகள், அறிவியல், அரசியல் அறிவியல், வானியல் உள்ளிட்ட பாடங்களில் பொது அறிவு வினாக்கள் கேட்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் பதில் அளித்தனர். இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான வினாடி -வினா போட்டியில் பங்கேற்பார்கள். மாணவர்களை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் பாராட்டி பேசினார். இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தியாகராஜன், ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ்குமார், பாரதிதாசன், ராஜேஸ்வரி இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, ஆசிரியர்கள் ராஜமாணிக்கம், அருண் வாலண்டைன், ஆனந்தராஜ், கண்ணன், சாந்தி, அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: