×

20 மனுக்கள் மீது விசாரணை கவலைப்படாமல் பார்த்துக் கொள்வதை விட பெற்றோரை கண்ணீர் விடாமல் பார்த்துகொள்ள வேண்டும்: கலைத்திருவிழா பரிசளிப்பு விழாவில் பேராசிரியர் பேச்சு

திருத்துறைப்பூண்டி, மார்ச் 2: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, ஆண்டு விழா, விளையாட்டு விழா பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பாலு தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அப்துல் முனாப் பள்ளி மேலாண்மை குழு தலைவி தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக முதுகலை ஆசிரியர் முகுந்தன் வரவேற்றார். பள்ளியின் ஒரு வருட செயல்பாட்டினை ஆண்டறிக்கையாக பட்டதாரி ஆசிரியர் பாலசுப்ரமணியம் வாசித்தார்.

நிகழ்ச்சியில் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு பேசும்போது, மனிதனுடைய அழகு சிரிப்பு பறவையுடைய அழகு சிறகு என்று குறிப்பிட்டு, மாணவர்கள் எப்போதும் குறும்புத்தனம் மிகுந்தவர்கள் என்றார். ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களுக்கு பண்பாடு, ஒழுக்கம், திருக்குறள் நெறிமுறைகளை கற்பிக்கின்றனர். ஒரு மாணவரை வெளிக்கொணர்ந்து உலகிற்கு அடையாளம் காட்டுவது அவர்களின் நல்ல செயல்பாடுகள், மாணவர்கள் கல்வி மட்டும் கற்காமல் எல்லா விதமான பள்ளி செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தெளிவான எண்ணங்களில் உயர்ந்த நோக்கத்தோடு சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டு நல்லவர்களோடு நட்பாக பழகுங்கள் எந்த செயலையும் நம்பிக்கையோடு செயல்படுத்துங்கள் என்றார். மேலும், உங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறி ஆசிரியர்கள் கூறும் அறிவுரை உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

கல்வியை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள் கல்வி வெற்றியை மேம்படுத்தும். வகுப்பறை பல கற்றல் வாய்ப்புகளை வழங்குகிறது, ஒவ்வொரு மாணவரும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுதல் வேண்டும். கீழே உள்ளவர் கல்வி கற்றால் மேலே பல உயர்வு பெறுவார்கள். கல்வியை கற்றவர்கள் உலகை வெல்வது எளிமை மற்றும் பெருமை. அப்துல் கலாம் பிறந்த இந்த மண்ணில் ஆக்கத் திறனையும் அறிவியல் அறிவையும் தருவது கல்வியே. பெற்றவர்களை மதித்தல் வேண்டும் மேலும் பெற்றோர்களை கவலைப்படாமல் பார்த்துக் கொள்வதை விட கண்ணீர் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து பட்டிமன்ற பேச்சாளர் சாகுல் ஹமீது பாடல்களைப் பாடி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் சேகல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் இந்திரா வெள்ளைச்சாமி, கட்டிமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராவுத்தர் அப்பா, கல்விப் புரவலர்கள் செல்வம், ரவிச்சந்திரன், மாம்சா ராவுத்தர் அறக்கட்டளையின் அப்துல் முத்தலிப், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பக்கிரிசாமி, பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவி தேன்மொழி, ரங்கநாதன், தண்டபாணி பேசினர். பல்வேறு இலக்கிய மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கட்டுமேடு ஊராட்சி மன்றத் தலைவர் மாலினி ரவிச்சந்திரன் பரிசுகளை வழங்கி பேசினார்.

சென்ற ஆண்டு மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மூன்று மாணவர்களுக்கு முறையே மருத்துவர் ஆரிப்முகமது, கல்வி புரவலர் ரவிச்சந்திரன், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் சாகுல்ஹமீது ஆகியோர் ஆறாயிரம் ரொக்கப் பரிசு வழங்கினர். ஆண்டுவிழா பரிசுகளை பருத்திச்சேரி பிர்லியண்ட் கல்வியியல் கல்லூரி தாளாளர் செல்வகுமார் வழங்கினார். முடிவில் மாணவ,மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் ஆசிரியர் ரகு நன்றி கூறினார்.

Tags : Art Festival Award Ceremony ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...