×

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 70 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

ராமநாதபுரம்:  ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் ஊராட்சியில் நேற்று கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய்க்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ தலைமையேற்று தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து தெரிவிக்கையில், ‘‘கால்நடைகளை தாக்கக்கூடிய கால்காணை மற்றும் வாய்காணை நோய் தொற்றை தடுப்பதற்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த நோய் என்பது வைரஸ் தொற்றால் உருவாகிறது. அதன் அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே நடப்பாண்டிற்கு இரண்டு முறை கோமாரி நோய் தடுப்பதற்கான தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. தற்பொழுது மூன்றாம் கட்டமாக இந்த தடுப்பூசி முகாம் 21 நாட்கள் வரை நடைபெறுகிறது.

ஒவ்வொரு நாளும் 25 மருத்துவ குழுவினர் பணி மேற்கொண்டு மாவட்டத்தில் 70 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி 100 சதவீதம் இலக்கை எய்திடும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன. இது மட்டுமின்றி இந்த சிறப்பு முகாம் முடிந்தாலும் விடுபட்ட கால்நடைகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் கூடுதலாக 10 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு முகாம்கள் நடைபெறும் பகுதியில் கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை அழைத்துச் சென்று தடுப்பூசிகளை போட்டுச் சென்று பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.  

பின்னர் புத்தேந்தல் கிராமத்தில் 200 கால்நடைகள் பயன்பெறும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணியினை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் இளங்கோவன், உதவி இயக்குநர் நேருக்குமார், கால்நடை மருத்துவர் டாப்ணி, புத்தேந்தல் ஊராட்சி தலைவர் கோபிநாத், கால்நடை பராமரிப்பு துறை உதவி ஆய்வாளர்கள் ஜெகதீஸ்வரி, பூங்கோதை, பஞ்சவர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Measles ,Vaccination Camp ,
× RELATED காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை: சுகாதார அவசர நிலை பிரகடனம்