×

விழுப்புரம் ஆசிரமத்தில் இருந்து காணாமல்போன முதியவர் இறந்திருக்கலாம் என கோர்ட்டில் சிபிசிஐடி தகவல்: விசாரணையை தொடர ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில், சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனது தொடர்பாகவும், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிடிக்கு மாற்றப்பட்டுள்ளது.  இந்நிலையில், அந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்த திருப்பூரை சேர்ந்த சபீருல்லாவை காணவில்லை எனக்கோரியும் அவரை மீட்டு தர வேண்டும் என்றும் அமெரிக்காவில் உள்ள அவரது உறவினர் சலீம்கான் என்பவரின் நண்பர் ஹலிதீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சுந்தர் மற்றும் நிர்மல்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சபீருல்லா காணாமல் போன வழக்கு தொடர்பாக சிபிசிஐடியின் அறிக்கையை கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் தாக்கல் செய்தார்.

அதில், அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட சபீருல்லா, பெங்களூருவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கபட்டார். எனினும், அங்கிருந்து அவர் தப்பிவிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூருவில் உள்ள பத்ராவதி, என்னுமிடத்தில் உள்ள மசூதியின் முன் கண்டெடுக்கப்பட்ட முதியவர் ஒருவரின் சடலம் சபீருல்லா கானின் அடையாளங்களுடன் ஒத்துபோகிறது என்று கூறப்பட்டிருந்தது. அறிக்கையை இதையடுத்து, சலீம் கான் நேரில் வந்து அடையாளம் காட்டுவது தொடர்பாக விளக்கமளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.மேலும், முறைகேடுகள் தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரமத்தைச் சேர்ந்த 8 பேர் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : CBCID ,Villupuram ashram ,ICourt ,
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...