×

முதல்வர் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க அமைச்சர் அறிவுறுத்தல்

சிவகங்கை, பிப். 28: தமிழக முதல்வரின் பிறந்தநாளை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என கூட்டுறவுத் துறை  அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட கழக செயலாளர், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர், தமிழக முதல்வரின் 70வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தி வருகிறார். 85 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளையும், கூறப்படாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார்.

இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடமாக கொண்டு வர இரவு பகலாக பணியாற்றி வருகிறார். தமிழக முதல்வரின் பிறந்த நாள் விழா நாளை சிறப்பான முறையில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. எனவே  சிவகங்கை மாவட்டத்தில் திமுகவினர் அனைவரும் தங்களது ஊராட்சி பகுதி, பேரூராட்சி, நகராட்சி, ஒன்றிய பகுதிகளில் கழக கொடி ஏற்றியும், ஏழை எளிய, ஆதரவற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கழக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் விளக்கி எடுத்து கூறியும் சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும். மேலும் நாளை முதல்வரின் பிறந்தநாள் விழாவில் தேசிய தலைவர்கள் பங்கேற்று வாழ்த்த உள்ளனர். இந்த பிறந்த நாள் பொதுக்கூட்டம் இந்திய அரசியலை தமிழ்நாடுதான் நிர்ணயிக்க உள்ளது என்பதை பறை சாற்றிடும் வகையில் அமைய உள்ளது. எனவே இந்த நிகழ்ச்சியிலும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்று பொதுக்கூட்டத்தினை சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Minister ,Chief Minister ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...