ஓமலூர், பிப்.28: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, உயர்கல்வி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் கள ஆய்வு நிகழ்ச்சி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்தது. ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு வட்டார அரசு பள்ளிகளில் படிக்கும் 220 மாணவ, மாணவிகள், 20 ஆசிரியர்கள், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தனர். குறிப்பாக பாகல்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, மாட்டுக்காரனூர், ஜாகீர் அம்மாபாளையம், சர்க்கார் கொல்லப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து 22 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். இவர்களை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், நூலகர் ஜெயபிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர்.