காங்கேயம்,பிப்.27: காங்கேயம் அருகே முத்தூர் சாலை, வாலிபனங்காடு பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலை கேரளாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரியும், கொடுமுடியில் இருந்து வந்த சரக்கு வேனும் மோதிய விபத்தில் காயம் அடைந்தவர்களை காங்கேயம் அரசு மருத்துவமனையில் நேற்று மதியம் தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சென்று உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: காங்கயம் அருகே முத்தூர் சாலை வாலிப்பனங்காடு பஸ் நிறுத்தம் அருகில் கேரளாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரியும், கொடுமுடியில் இருந்து வந்த வேனும் மோதிய விபத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 28 நபர்களில் 24 நபர்கள் மேல் சிகிச்சைக்காக திருப்பூர், ஈரோடு, கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 4 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்கள்.
மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் விபத்தில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பழனி(50), வளர்மதி(26), இந்துமதி(23), காயத்ரி(12) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.