×

செம்பனார்கோயில் பகுதியில் கோயில்களில் கார்த்திகை வழிபாடு

செம்பனார்கோயில்: செம்பனார்கோயில் அருகே மேலப்பாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஜுரகரேஸ்வரர் கோயில் உள்ளது. நேற்று கார்த்திகையை முன்னிட்டு இந்த கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கும் செல்வ முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு பால், தேன், இளநீர், சந்தனம், திரவிய பொடி, மஞ்சள் பொடி, தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்து ஆராதனையும், அர்ச்சனையும் நடந்தது. அப்போது கோயிலில் இருந்த முருக பக்தர்கள், கந்த சஷ்டி கவசம் படித்துக் கொண்டு கோயிலை 108 முறை வலம் வந்து உலக நன்மைக்காகவும், இயற்கை இடர்பாடுகள் தவிர்க்க வேண்டியும் கூட்டு வழிபாடு செய்தனர்.

இதேபோல் செம்பனார்கோயில் சுவர்ணபுரீஸ்வரர் கோயில், கீழிருப்பு சிதம்பரேஸ்வரர் கோயில், ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், பரசுலூர் வீரட்டேஸ்வரர் கோயில், விளநகர் துறைகாட்டும் வள்ளலார் கோயில், தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோயில், முடிகண்டநல்லூர் குழம்பீஸ்வரர் கோயில், பொன்செய் நற்றுணைஈஸ்வரர் கோயில், கீழையூர் கடைமுடிநாதர் கோயில் செம்பனார்கோயில், கஞ்சாநகரம் ஆகிய பகுதிகளில் உள்ள குமரன் கோயில், திருவிளையாட்டம் சுயம்புநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் கார்த்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. இதில் சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Sembanarkoil ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி