×

அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து 30 சவரன், ₹1 லட்சம் திருட்டு மயக்க ஸ்பிரே அடித்து துணிகரம் அணைக்கட்டு அருகே பரபரப்பு

அணைக்கட்டு, பிப்.26: அணைக்கட்டு அருகே அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து தூங்கியவர்கள் மீது மயக்க ஸ்பிரே அடித்து 30 சவரன் நகை, ₹1 லட்சம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(47). இவர் அவருடைய மனைவி, மகன், மகள், தாய், தந்தை என 6 பேரும் மெயின்ரோட்டை ஒட்டியிருக்கும் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பாஸ்கரன் மற்றும் குடும்பத்தினர் தூங்கி எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த அறையின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

அந்த அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை, பணம் உள்ளிட்டவைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து அணைக்கட்டு போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்த முயன்றபோது அவரது வீட்டின் பக்கத்தில் உள்ள சதீஷ்குமார், பன்னீர்செல்வம் வீடு என தொடர்ச்சியாக 3 வீடுகளில் திருட்டு நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து திருட்டு நடந்த வீடுகளுக்கு உள்ளே சென்று போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் வீட்டில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தினர். அதில் பாஸ்கரன் வீட்டின் இருந்தவர்கள் மயக்க நிலையிலேயே பதிலளித்தனர். இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது யாரோ முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்தது போல் இருந்ததாகவும் வீட்டில் இருந்த பெரியவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பாஸ்கரன் உள்ளிட்டோர் அணைக்கட்டு போலீசில் அளித்த புகாரில் பாஸ்கரன் வீட்டில் பிரோவில் இருந்த 42 சவரன் நகை, ₹1.10லட்சம், 90 கிராம் வெள்ளி, பையில் வைத்திருந்த மூன்று வங்கி டெபாசிட் பத்திரங்களை திருட்டு போனதாகவும், சதீஷ்குமார் வீட்டில் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், வெள்ளிக்கொலுசும், பன்னீர்செல்வம் வீட்டில் கதவு மட்டும் உடைக்கப்பட்டு திருட்டு முயற்சி நடந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் திருட்டு நடந்த வீடுகளில் டிஎஸ்பி திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை பதிவுகள் ஏதாவது உள்ளதா என கைரேகை நிபுணர்கள் வந்து சோதனை செய்தனர். அணைக்கட்டு அருகே அருகே அடுத்தடுத்து மெயின்ரோட்டை ஒட்டியுள்ள மூன்று வீடுகளில் தொடர் திருட்டு நடந்திருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags : Sawarans ,Vadhakaram dam ,
× RELATED அணைக்கட்டு அருகே பட்டப்பகலில்...