×

பந்தலூர் பகுதியில் குறுமிளகு திருடிய கேரள வாலிபர் கைது

பந்தலூர், பிப். 26: பந்தலூர் அருகே எருமாடு காளியோடு, அய்யன்கொல்லி பகுதிகளில் குறுமிளகு திருடிய கேரள வாலிபரை போலீசார் கைது செய்து 90 கிலோவை பறிமுதல் செய்தனர்.
பந்தலூர் அருகே எருமாடு காளியோடு, அய்யன்கொல்லி நெல்லிமேடு, கையுன்னி போத்துகுலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2022ம் ஆண்டு கடை மற்றும் வீடுகளை உடைத்து சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ குறுமிளகு திருடப்பட்டதாக எருமாடு மற்றும் சேரம்பாடி காவல்நிலையங்களில் சம்மந்தப்பட்டவர்கள் புகார் அளித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, தேவாலா டிஎஸ்பி செந்தில்குமார் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் அமுதா, உதவி ஆய்வாளர் மோகன், தலைமை காவலர் சந்திரன் மற்றும் முதுநிலை காவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து சுமார் 100 கிலோ குறுமிளக்கு பறிமுதல் செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், குறுமிளகு திருட்டில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம், கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் புளப்பள்ளி பகுதியை சேர்ந்த பஜ்ஜிமணி என்கிற சாம்பார் மணி (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரிடமிருந்த 90 கிலோ குறுமிளகு பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Kerala ,Bandalur Area ,
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...