×

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி பணிகள் மும்முரம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாய் நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் நடவுப்பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே அணையில் இருந்து தண்ணீர் திறந்தால், குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்தது. தாமதமாக திறந்தால், குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும். இந்நிலையில் கடந்த ஆண்டு முன் கூட்டியே மே மாதம் 24ம் தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால், குறுவை, மற்றும் சம்பா, தாளடி சாகுபடி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிக பரப்பளவில் நடைபெற்றது. இதேபோல, இந்தாண்டு நெல் கொள்முதலும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நடைபெறும். அதன்படி தற்போது பம்புசெட் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சாவூரை அடுத்த சூரியம்பட்டி பகுதியில் உழவு மற்றும் பாய் நாற்றாங்கால் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், நாற்றுகள் வளர்ந்த இடங்களில் நாற்று பறிப்பு பணிகள் நடக்கிறது. ஒரு சில வயல்களில் இயந்திரம் மூலம் நாற்று நடவும் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல மேலவெளி தோட்டம், ரெட்டிபாளையம் பகுதிகளில் பம்புசெட் வைத்திருக்கும் விவசாயிகளும் கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டு குறுவை பாசனத்துக்கு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என நம்புகிறோம். இதனால் தற்போது, முன்பட்ட குறுவைக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். பம்புசெட் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படும் போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத நிலை வரும். மேலும் பல இடங்களில் குறுவைக்கான நாற்றங்கால் தயாரிக்கும் பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் மற்றும் உரம் போன்ற இடுபொருட்களையும் தட்டுப்பாடு இல்லாமல் வாங்கி இருப்பு வைத்து விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags : Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...