×

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உற்சவ கொடியேற்றம்: நாளை நடைபெறுகிறது

திருப்புத்தூர், பிப் 25: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில்  பிரசித்தி பெற்ற ஸ்ரீ சௌமிய நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசி மக தெப்ப உற்சவம் விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த தெப்ப உற்வத்திற்கு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். முக்கிய நிகழ்வாக கோயில் தெப்பக்குளப் படிகளிலும், குளத்தைச் சுற்றிலும் பெண்கள் தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

இந்தாண்டு மாசி தெப்ப உற்சவ விழாவை முன்னிட்டு இன்று மாலை ம்ருத்ஸங்கரஹணம், சேனை முதல்வர் புறப்பாடு நடைபெறுகிறது. நாளை (26ம் தேதி) காலை 7.00 மணியளவில் சுவாமி கல்யாண மண்டபம் எழுந்தருளல் நடைபெறும். தொடர்ந்து காலை 10.36 மணிக்கு மேல் 11.00 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். பெருமாளுக்கும் ஸ்ரீதேவி, பூமா தேவியருக்கும், உடன் பட்டாட்சியருக்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். 2ம் நாள் முதல் 6ம் நாள் வரை தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி திருவீதி புறப்பாடு நடைபெறும்.

6ம் நாளான மார்ச் 3ம் தேதி இரவு ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் வைபவம் நடைபெறும். 7ம் நாளான மார்ச் 4ல் மாலை தெப்பக்குளம் அருகே முகூர்த்தக்கால் நடுதலும், தொடர்ந்து சுவாமி சூர்ணாபிஷேகம், தங்கத் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும் நடைபெறும். 8ம் நாளான மார்ச் 5ல் இரவு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 9ம் திருநாளான மார்ச் 6ல் காலையில் வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடும், பின்னர் காலை 10 மணிக்கு மேல் தெப்பம் முட்டுத்தள்ளுதலும், இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி திருவீதி புறப்பாடும் நடைபெறும்.

10ம் திருநாளான மார்ச் 7ல் காலை  பகல் 11.00 மணிக்கு மேல் தெப்பம் சுற்றுதலும், இரவு 9 மணிக்கு பெருமாள் சீதேவி, பூமாதேவியாருடன் மின்ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெறும். 11ம் திருநாளான மார்ச் 8ல் காலையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

Tags : Masi Theppa ,Thirkoshtiyur Perumal Temple ,
× RELATED திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில்...