ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் பூட்டியே கிடக்கும் கிராமப்புற நூலகங்களை, சீரமைத்து பயன்பட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கிராமங்களில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நாட்டு நடப்பு மற்றும் பொது அறிவை வளர்த்துகொள்ள கிராமபுறங்களில் நூலகங்கள் கட்டபட வேண்டும் என்று கடந்த 2006ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம், ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா ரூ20 லட்சம் ஒதுக்கீடு செய்யபட்டது.
இதில், ரூ3 லட்சம் நிதியினை நூலகம் கட்டப்பட வேண்டும் என்று அரசாணை வெளியிடபட்டது. இந்த நூலகத்தில் பொது அறிவு, அறிவியல், தமிழ் இலக்கியம் உள்ளிட்ட விலை உயர்ந்த புத்தகங்கள் மற்றும் நூலகத்துக்கு தேவையான மேஜை நாற்காலிகளை அரசு வழங்கியது. தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் நூலக கட்டிடங்கள் கட்டப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகளும் தலா ரூ3 லட்சம் மதிப்பில் நூலக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள நூலகங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் திறக்கப்படாமல் நூலகங்கள் பழுதடைந்து காணபட்டன.
தற்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், நூலக கட்டிடங்களை சீரமைத்து மீண்டும் மாணவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் கட்டிடங்கள் புதுபிக்க நிதி ஒதுக்கிடு செய்து கட்டிடங்கள் சிரமைக்கபட்டு வருகிறது. அந்த வகையில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 58 ஊராட்சிகளில் கடந்த ஆண்டு 21 ஊராட்சிகளில் உள்ள நூலகங்கள் சீரமைக்கப்பட்டன. தற்போது, 2ம் கட்டமாக நூலக சீரமைப்பிற்கு ரூ27 லட்சம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.