நெல்லை, பிப். 24: பழவூர் அருகே இருக்கன்துறை முத்தாரம்மன் கோயிலில் 5 பவுன் நகை மற்றும் உண்டியல் பணம் ரூ.5 ஆயிரத்தை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள பழவூர் அடுத்துள்ள இருக்கன்துறை முத்தாரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் நிர்வாகியாக சாமிகண்ணு மகன் தங்கசாமி உள்ளார். இவர் கடந்த 17ம்தேதி பூஜைகளை முடித்துவிட்டு கோயில் நடையை அடைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் கோயிலுக்கு சென்று பார்த்தபோது 3 பவுன் நகை ஒன்று, ஒரு பவுன் நகை 2 என மொத்தம் 5 பவுன் நகை மற்றும் உண்டியல் பணம் ரூ.5 ஆயிரம் திருடு தெரிய வந்தது. இதையடுத்து தங்கசாமி பழவூர் போலீசில் நேற்று முன்தினம் அளித்த புகாரின்பேரில் கோயில் நகை மற்றும் பணத்தை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.