கமுதி, பிப்.24: கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது. கமுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பொங்கல் திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனித்திருவிழாவை முன்னிட்டு, நேற்று கோயிலின்ன் வடக்கு வாசல் முன்பு முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்பலகாரர் சக்திவேல், நாளது மாத முறைகாரர் சின்னமணி மற்றும் உறவின் முறை டிரஸ்டிகள், நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் 26ம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா துவங்கவுள்ளது. அன்று பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். பல்வேறு வாகனங்களில் அம்மன் நகர்வலம் வருவார். ஏப்.4ம் தேதி கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெறும். 5ம் தேதி அக்னிச்சட்டி திருவிழா நடைபெறும். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடல் முழுவதும் களிமண் பூசி கோயிலை வலம் வரும். ஏப்.7ம் தேதி 2007 திருவிளக்கு பூஜை, 8ம் தேதி முளைப்பாரி ஊர்வலத்துடன் திருவிழா நிறைவு பெறும்.