அய்யலூர், பிப். 24: வடமதுரை அருகே அய்யலூரிலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அதன்படி நேற்று அய்யலூரில் இருந்து 34வது ஆண்டாக பக்தர்கள் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். முன்னதாக காலை 8 மணியளவில் அய்யலூரில் உள்ள சக்திவிநாயகர், மகா காளியம்மன், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் மாலை 5 மணியளவில் அய்யலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் அனைவரும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற உடை அணிந்து அய்யலூர் களர்பட்டியில் உள்ள ஆதிபராசக்தி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஒன்றிணைந்தனர். தொடர்ந்து கோயிலில் பிரசாதம் பெற்று கொண்டு மாரியம்மன் அலங்கார ரதத்தை இழுத்தவாறு சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
