சாத்தான்குளம், பிப். 22: தட்டார்மடம் அருகே நடுரோட்டில் 2 லோடு ஆட்டோக்கள் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தட்டார்மடம் அருகே உள்ள கேட்டவிளை புதூரை சேர்ந்தவர் ஜோசப். இவர், தனது லோடு ஆட்டோவில் தர்பூசணி பழங்களை ஏற்றிக் கொண்டு திசையன்விளை செல்வதற்காக தட்டார்மடம் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு வெளியே வந்தார். அப்போது திசையன்விளையை சேர்ந்த வியாபாரி செல்வக்குமார், திசையன்விளையில் இருந்து பிராய்லர் கோழிகளை லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தட்டார்மடம் நோக்கி வந்தார். தட்டார்மடம் பெட்ரோல் பங்க் அருகில் வரும்போது இரு வண்டிகளும் நேருக்குநேர் மோத இருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக எதிர் எதிரே தலைக்குப்புற கவிழ்ந்தன. இதில் தர்பூசணி பழங்கள் ரோட்டில் சிதறின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து தட்டார்மடம் எஸ்ஐ நெல்சன் மற்றும் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். இதில் இரு ஓட்டுநர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தட்டார்மடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.