×

சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை, பிப்.22: புதிய  மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிப்.28ம் தேதி 15  நிமிடங்கள் வாகன நிறுத்த போராட்டம் சிஐடியூ சார்பில் நடக்கிறது. இதற்கான  ஆலோசனை கூட்டம் நெல்லை அரசு போக்குவரத்துகழக சிஐடியூ தொழிற்சங்க  அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட  செயலாளர் முருகன் தலைமை வகித்தார். அரசு போக்குவரத்து கழக சிஐடியூ  தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஜோதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில்  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு எதிராகவும் உள்ள  மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது. ஒன்றிய  அரசும், மாநில அரசும் ஆன்லைன் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். 15  ஆண்டுகளை கடந்த வாகனங்களை அழிப்பது என்ற முடிவை கைவிட வேண்டும். ஆட்டோ, டாக்சி  கட்டணத்தை தீர்மானிக்கும் செயலியை அரசு உருவாக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல்  விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்ய  வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28ம் தேதி  பிற்பகல் 12 மணியிலிருந்து 12.15 வரை கால் மணி நேரம் சாலையில் செல்லும்  அனைத்து வாகனங்களையும் நிறுத்தி போராட்டம் நடத்துவது என முடிவு  செய்யப்பட்டது. கூட்டத்தில் சாலை போக்குவரத்து சங்கத்தின் பொதுச்  செயலாளர் மரிய ஜான்ரோஸ், நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட தலைவர்  நடராஜன், துணைதலைவர் சற்குணம் மற்றும் சாலை போக்குவரத்து சங்கத்தின்  நிர்வாகிகள் சங்கர் சர்மா, அரசு போக்குவரத்து சங்க மாவட்ட தலைவர் காமராஜ்,  நிர்வாகிகள் மணி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து சென்னையில் நடந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தின் நகல் எரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நெல்லை சிஐடியு சார்பில் மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில்  தொழிற் சங்க தலைவர் காமராஜ், பொதுசெயலாளர் ஜோதி ஆகியோர் முன்னிலையில் நெல்லை பொது மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : CITU transport union protest ,
× RELATED திருச்சி தேசிய கல்லூரியில் பொருளியல்துறையில் துவக்க நிகழ்ச்சி