×

நாகப்பட்டினத்தில் அனிச்சியகுடி முச்சந்தி காளியம்மன் கோயில் உண்டியலுக்கு சீல் வைப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் பப்ளிக் ஆபீஸ் சாலையில் பழமை வாய்ந்த அனிச்சியகுடி முச்சந்தி காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை அப்பகுதி பொதுமக்கள் குழு அமைத்து நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோயிலுக்கு ஒரு கால பூஜைக்கு அறநிலையத்துறை நிதி உதவி செய்கிறது. ஆண்டு தோறும் ஆடிப்பூரம், புரட்டாசி பொங்கல் விழா ஆகியவை இங்கு நடத்தப்படும். இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ராணி தலைமையில் அதிகாரிகள் கோயிலுக்கு வந்தனர். இந்த கோயிலில் அதிக அளவு நகை, பணம் காணிக்கையாக பெறப்படுவதாக சென்னையில் உள்ள இந்து சமய அறநிலை துறை ஆணையருக்கு புகார் மனுக்கள் வந்துள்ளது. இதனால் அதிகாரிகள் உத்தரவின் பேரில் அறநிலைய துறை சார்பில் கோயில் உண்டியலுக்கு சீல் வைப்பதாக கூறி கோயிலுக்கு வெளியே இருந்த உண்டியலுக்கு சீல் வைத்தனர். இதனை அறிந்த அந்தபகுதி பொதுமக்கள் கோயில் கதவை பூட்டினர். பின்னர் நாகப்பட்டினம் -நாகூர் சாலையில் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து டிஎஸ்பி பாலகிருஷ்ணன், தாசில்தார் ராஜசேகரன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். கோயில் உண்டியலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றினால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவதாக தெரிவித்தனர். இதையடுத்து நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ராணியுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து கோயில் உண்டியலின் சீல் அகற்றப்பட்டது. கணக்குகளை சரியாக ஒப்படைக்க வேண்டும் என கூறி அறநிலையதுறையினர் உண்டியல் சாவிக்கு மட்டும் சீல் வைத்தனர். இதில் சமாதானம் அடைந்த பொது மக்கள் கோயில் நடையை திறந்தனர். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினர்.

Tags : Anichiyakudi Muchanti ,Kaliamman ,Nagapattinam ,
× RELATED காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா